மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ரத்து


மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ரத்து
x
தினத்தந்தி 10 Jan 2022 4:10 PM GMT (Updated: 10 Jan 2022 4:10 PM GMT)

ஈரோட்டில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், பெட்டியில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு சென்றனர்.

ஈரோட்டில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், பெட்டியில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு சென்றனர்.
கூட்டம் ரத்து
கொரோனா தொற்று 3-வது அலை வேகமாக பரவி வருவதால், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தும் வகையில் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அந்த பெட்டியில் தங்களது மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் மூலமாக தமிழக கவர்னருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக மாவட்ட தலைவர்கள் ஈ.பி.ரவி, சரவணன் மற்றும் கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
ஜனநாயக விரோதம்
பஞ்சாப் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டபடி ஹெலிகாப்டரில் செல்லாமல் சாலை வழிப்பயணத்தில் சென்றார். அப்போது அவர் போராட்டக்காரர்கள் நிற்பதாக கூறி ஒரு மேம்பாலத்தில் நின்று நாடகமாடி திரும்பி சென்றுவிட்டார். அரசியல் செய்யும் பிரதமர் நரேந்திரமோடியின் இந்த செயலை கண்டிப்பதோடு, இதை காரணம் காட்டி பஞ்சாப் மாநிலத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை குறை கூறி ஆட்சியை கலைக்க முயற்சிக்கும் இந்த செயல் ஜனநாயக விரோதமானது. பிரதமர் பங்கேற்க வந்த கூட்டத்தில் கூட்டம் குறைவாக இருந்ததால், அவர் கூட்டத்தை ரத்து செய்துவிட்டார். எனவே உண்மை நிலையை மூடி மறைத்து பஞ்சாப் மாநில ஆட்சியை குறைகூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
மனு கொடுக்கும்போது சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜெ.சுரேஷ், மண்டல தலைவர் விஜயபாஸ்கர், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முகமது அர்சத், சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் கே.என்.பாஷா, வக்கீல் பிரிவு மாநில செயலாளர் சி.எம்.ராஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் கட்சியினர் மனு கொடுத்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும், தீக்குளிப்பு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மனு அளிக்க வந்த பொதுமக்களை போலீசார் சோதனையிட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

Related Tags :
Next Story