தீ விபத்தில் வீடு எரிந்து நாசம்


தீ விபத்தில்  வீடு எரிந்து நாசம்
x
தினத்தந்தி 11 Jan 2022 4:47 PM GMT (Updated: 11 Jan 2022 4:47 PM GMT)

ஊஞ்சலூர் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து நாசம் ஆனது.

ஊஞ்சலூர் அருகே தீ விபத்தில்  வீடு எரிந்து நாசம் ஆனது. 
தொழிலாளி
ஊஞ்சலூர் அருகே உள்ள கொளாநல்லியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (37). இவருடைய வீடு கூரை மற்றும் இரும்பினால் ஆன தகரத்தால் வேயப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு ரமேசும், மகேஸ்வரியும் அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். 
தீப்பிடித்தது
அப்போது ரமேசின் வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதைத்தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி அறிந்ததும் கோவிலுக்கு சென்ற ரமேசும், அவருடைய மனைவியும் வீட்டுக்கு விரைந்து வந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. 
உடனே இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். 
நாசம்
எனினும் இந்த தீ விபத்தில் ரமேசின் வீடு முழுவதும் எரிந்து நாசம் ஆனதுடன், வீட்டின் உள்ளே வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பல் ஆனது. 
தீ விபத்து நடந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ‘மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்,’ என தெரிவித்தனர்.

Next Story