விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் கிராமப்புறங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் கிராமப்புறங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2022 5:04 PM GMT (Updated: 11 Jan 2022 5:04 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டது.

விழுப்புரம், 

சிறு விடுப்பு எடுத்து போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும், பணி மேற்பார்வையாளர்களுக்கான அளவீட்டினை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், அலுவலக பணியாளர்கள் என சுமார் 750 பேர் பணிக்கு செல்லாமல் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிப்பு

இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம், 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஆகிய அலுவலகங்களில் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கியது.
மேலும் இவர்களின் இந்த போராட்டம் காரணமாக கிராமப்புறங்களில் அரசின் தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை பார்வையிடுதல், மருத்துவ முகாம் நடத்துதல், குடிநீர் பணிகள், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Next Story