நாகையில் ரூ.367 கோடியில் கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரி திறப்பு


நாகையில் ரூ.367 கோடியில் கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரி திறப்பு
x
தினத்தந்தி 12 Jan 2022 4:26 PM GMT (Updated: 12 Jan 2022 4:26 PM GMT)

நாகை ஒரத்தூரில் ரூ.367 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டது. இதையொட்டி நாகையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கு ஏற்றினார். இதில் கலெக்டர், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

வெளிப்பாளையம்:-

நாகை ஒரத்தூரில் ரூ.367 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டது. இதையொட்டி நாகையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கு ஏற்றினார். இதில் கலெக்டர், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். 

புதிய மருத்துவக்கல்லூரி

நாகையை அடுத்த ஒரத்தூரில் 60.4 ஏக்கரில் ரூ.366.85 கோடி மதிப்பில் 200 படுக்கை வசதிகள் கொண்ட ஆஸ்பத்திரியுடன் கட்டப்பட்டது. இங்கு உடற்கூறியல் துறை, உடல் இயங்கியல் துறை, உயிர் வேதியியல் துறை, நோயியல் துறை, தடயவியல் மருத்துவத்துறை ஆகிய துறைகளுக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.  
மேலும் 300 மாணவர்கள் அமர்ந்து படிக்க கூடிய வகையில் பொது நூலகம் இணையதள வசதியுடன் கட்டப்பட்டு உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. 

அமைச்சர் குத்து விளக்கு ஏற்றினார்

இந்த மருத்துவக்கல்லூரியின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்தார். இதையொட்டி நாகை மருத்துவக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், செல்வராசு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷாநவாஸ், நாகை மாலி, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story