நெல் பயிரில் துத்தநாக சத்து குறைபாட்டை தடுப்பது எப்படி? வேளாண்மை அலுவலர் விளக்கம்


நெல் பயிரில் துத்தநாக சத்து குறைபாட்டை தடுப்பது எப்படி? வேளாண்மை அலுவலர் விளக்கம்
x
தினத்தந்தி 12 Jan 2022 5:42 PM GMT (Updated: 12 Jan 2022 5:42 PM GMT)

நெல் பயிரில் துத்தநாக சத்து குறைபாட்டை தடுப்பது எப்படி? என்பது குறித்து கிருஷ்ணகிரி வேளாண்மை அலுவலர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
துத்தநாக சத்து
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டு 4 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நெல் பயிரிருக்கு தழை, மணி, சாம்பல், இரும்பு, துத்தநாகம், காப்பர் ஆகியவை அடிப்படையாக தேவைப்படும் ஊட்ட சத்துக்கள் ஆகும். தற்போது கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நெற்பயிரில் துத்தநாக சத்து குறைபாடு பரவலாக காணப்படுகிறது. 
ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக நெல்லை பயிரிடுவதால் துத்தநாக சத்து குறைபாடு ஏற்படுகிறது. நிலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி உப்புக்கள் அளவு அதிகரிப்பதும் சத்து குறைபாட்டுக்கு காரணம் ஆகும். மண்ணில் சுண்ணாம்பு தன்மை அதிகம் இருந்தால் துத்தநாக சத்து பயிருக்கு கிடைக்க இயலாத நிலை ஏற்படுகிறது. 
ஜிங் சல்பேட்
பயிருக்கு தேவையான அளவுக்கு அதிகமாக மணி சத்து, மக்னீசியம் சத்து, இரும்பு சத்து இடுவதால் அவை துத்தநாக சத்தின் செயல் திறனை குறைக்கிறது. துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்பட்டால், பயிர் வளர்ச்சி குன்றி, இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுகள் கொண்டதாக மாறி காணப்படும். பின்னர் காய்ந்துவிடும். இலைத்தாளின் அகலம் குறைந்து சிறுத்து காணப்படும். மலட்டு தன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதை நிவர்த்தி செய்ய,  ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட், பயிர் நடவுக்கு முன்பு ஒருமுறையும், நட்ட பின் 30 முதல் 40 நாட்களுக்குள் ஒருமுறையும் இட வேண்டும். இதன் மூலம் பயிரின் மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story