புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x
தினத்தந்தி 12 Jan 2022 5:46 PM GMT (Updated: 12 Jan 2022 5:46 PM GMT)

தினத்தந்தி புகாா் பெட்டி

புகார் பெட்டி

குவிந்து கிடக்கும் குப்பை

பெருந்துறை அருகே உள்ள திங்களூர் தேர் வீதியில் குப்பை கொண்டுவந்து கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் குப்பை கொட்டப்படும் இடம் முட்புதராக மாறிவிட்டது. அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திங்களூர் தேர்வீதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திங்களூர்.


புதர் மண்டிய மயானபாதை

  பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது சேர்வராயன் பாளையம். இங்கு மயானத்துக்கு செல்லும் பாதை பராமரிப்பு இன்றி முட்புதராக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை சுமந்து செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். இதேபோல் ஆம்புலன்சுகளும் உள்ளே செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் மயான பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், சேர்வராயன்பாளையம்.
  
துர்நாற்றம் வீசும் குப்பை

   தாளவாடி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள சில தெருக்களில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பையை அகற்ற சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  
கழிப்பிடம் கட்ட வேண்டும்

  வேம்பத்தி ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளபாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இதுவரை ஒரு பொது கழிப்பிடம் கூட இல்லை. இதனால் பலர் திறந்தவெளியையும், சாலையோரங்களையும் கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் நிலவுகிறது. உடனே எங்கள் பகுதியில் கழிப்பிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், வெள்ளாளபாளையம்.
  
வால்வு பொருத்தப்படுமா?

  ஆப்பக்கூடல் அருகே ஆ.புதுப்பாளையம் காலனியில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவில் பின்புறம் குடிநீர் குழாய் உள்ளது. இதில் வால்வு இல்லாததால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது. உடனே வால்வு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், ஆ.புதுப்பாளையம் காலனி.
  
குடிநீர் வசதி

  பெருந்துறை பஸ் நிலையம் அருகே கோட்டை முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு குடிநீர் தொட்டி இல்லாததால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். உடனே குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?
  பொதுமக்கள், பெருந்துறை.
  
தடுப்புச்சுவர் இல்லாத பாலம் (படம்)

  ஈரோடு காசிபாளையத்தில் உள்ள தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இதனால் தவறி கழிவுநீர் கால்வாயில் விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், காசிபாளையம்


Next Story