மும்பை உள்பட மராட்டிய மாநிலம் முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரிப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 12 Jan 2022 6:02 PM GMT (Updated: 12 Jan 2022 6:02 PM GMT)

தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது.

மும்பை, 
 தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது.
பாதிப்பு அதிகரிப்பு
மராட்டியத்தில் கடந்த 7-ந் தேதி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது. மேலும் அடுத்த 2 நாட்களிலும் பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி இருந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பாதிப்பு குறைந்து இருந்தது. திங்கட்கிழமை 33 ஆயிரத்து 470 பேரும், நேற்று 34 ஆயிரத்து 424 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் இன்று பாதிப்பு அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் புதிதாக 46 ஆயிரத்து 723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல 32 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். மாநிலத்தில் இதுவரை 70 லட்சத்து 34 ஆயிரத்து 661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 66 லட்சத்து 49 ஆயிரத்து 111 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 2 லட்சத்து 40 ஆயிரத்து 122 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 701 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதேபோல தலைநகர் மும்பையிலும் 4 நாட்களாக குறைந்து வந்த பாதிப்பு நேற்று அதிகரித்தது. நகரில் புதிதாக 16 ஆயிரத்து 429 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று நகரில் 11 ஆயிரத்து 647 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். இதேபோல நகரில் இன்று மேலும் 7 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை மும்பையில் 9 லட்சத்து 56 ஆயிரத்து 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 420 பேர் உயிரிழந்து உள்ளனர்.
86 பேருக்கு ஒமைக்ரான்
மராட்டியத்தில்  மேலும் 86 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. அதில் 53 பேர் புனே மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். இதேபோல மும்பையில் 21, பிம்பிரி சிஞ்வட்டில் 6, புனே ஊரகப்பகுதியில் 1, சத்தாராவில் 3, நாசிக்கில் 2 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதுவரை மாநிலத்தில் 1,367 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 734 பேர் குணமடைந்துவிட்டனர்.

Next Story