நெல்லையில் ரூ.3 கோடி கடன் கொடுத்த பிரச்சினை: பள்ளி தலைமை ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை


நெல்லையில் ரூ.3 கோடி கடன் கொடுத்த பிரச்சினை: பள்ளி தலைமை ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 12 Jan 2022 10:10 PM GMT (Updated: 12 Jan 2022 10:10 PM GMT)

பள்ளி தலைமை ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

நெல்லை:
நெல்லையில் ரூ.3 கோடி கடன் கொடுத்த பிரச்சினையால் பள்ளி தலைமை ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது மனைவி போலீசில் பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர்
நெல்லை பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பகுதியை சேர்ந்தவர் சாம்சன் (வயது 56). இவர் அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.
சாம்சனின் மனைவி மேரி விக்டோரியா. இவரும் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
தற்கொலை
சாம்சனிடம் பலர் பணத்தை கடனாக வாங்கிச் சென்றனர். ஆனால், அந்த பணத்தை அவர்கள் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். மொத்தம் ரூ.3 கோடிக்கு மேல் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராததால் மனமுடைந்த சாம்சன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாம்சன் பரிதாபமாக இறந்தார்.
மனைவி போலீசில் புகார்
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்தார். தற்கொலைக்கு தூண்டியதாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, சாம்சனின் மனைவி மேரி விக்டோரியா நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் மனு கொடுத்தார். அதில் ‘தனது கணவரிடம் நெல்லையை சேர்ந்த பலர் கடனாக வட்டிக்கு பணம் வாங்கிச் சென்றனர். ஆனால், அந்த பணத்தை அவர்கள் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் மனமுடைந்த எனது கணவர் சாம்சன் தற்கொலை செய்து கொண்டார். எனவே, பணத்தை வாங்கி திருப்பி தராமல் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த புகார் மனு தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
நெல்லையில் ரூ.3 கோடி கடன் கொடுத்த பிரச்சினையால் பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story