வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறப்பு


வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறப்பு
x
தினத்தந்தி 12 Jan 2022 10:46 PM GMT (Updated: 12 Jan 2022 11:07 PM GMT)

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை நடக்கிறது.



சென்னை,

பெருமாள் கோவில்களில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நடக்கிறது.  இதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

விழாவையொட்டி இன்று அதிகாலை 4.15 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் உள்பிரகார புறப்பாடு, அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அதற்கு பிறகு இன்று காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்வது, உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தரிசனத்திற்கு வராமல் தவிர்க்கலாம்.

அதேபோல், பக்தர்கள் தேங்காய், பூ, பழம் மற்றும் துளசி கொண்டு வர வேண்டாம். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் பெரிய திரை கொண்ட தொலைக்காட்சிகள் மற்றும் யு-டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று (காலை) 6 மணியிலிருந்து 10 மணி வரை பக்தர்கள் சர்வ தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10 முதல் 10.45 மணி வரை தரிசனம் நிறுத்தப்பட்டு நைவேத்தியம், தொடர்ந்து 10.45 மணியிலிருந்து பகல் 2 மணி வரை தரிசனம் செய்யலாம். பகல் 2 முதல் 2.30 மணி வரை தரிசனம் நிறுத்தப்படுகிறது.

தொடர்ந்து 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை சர்வ தரிசனம், 5 மணி முதல் 5.30 மணி வரை நைவேத்தியம், 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

பக்தர்கள் முககவசம் அணிந்து வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்யலாம். கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். விழா ஏற்பாடுகளை உள்ளூர் ஆலோசனைக்குழு தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி, தேவஸ்தானம் அதிகாரிகள் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

இதுதவிர மாநகரில் உள்ள புரசைவாக்கம், வெள்ளார் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து போகி பண்டிகையையொட்டி இன்று பகல் 12 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

அதேபோல், மயிலாப்பூரில் உள்ள மாதவப்பெருமாள், ஆதிகேசவப்பெருமாள் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், வில்லிவாக்கம் சவுமியா தாமோதர பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது என்று அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story