திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்: கலெக்டர்


திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்: கலெக்டர்
x
தினத்தந்தி 13 Jan 2022 11:34 AM GMT (Updated: 13 Jan 2022 11:34 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

பயிர் காப்பீடு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டு ராபி பயிர்களுக்கு கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் காப்பீடு செய்ய நவரை நெற்பயிருக்கு ரூ.473, கம்பு பயிருக்கு ரூ.140, துவரை, உளுந்து, பச்சைப்பயிறு ரூ.256, நிலக்கடலைக்கு ரூ.432, எள்ளுக்கு ரூ.143, கரும்புக்கு ரூ.2 ஆயிரத்து 650 வீதம் ஒரு ஏக்கருக்கு பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

கடைசி நாள்

கம்பு மற்றும் உளுந்து பயிருக்கு வருகிற 17-ந்தேதி, துவரை மற்றும் நிலக்கடலைக்கு வருகிற 31-ந்தேதி , எள் மற்றும் பச்சை பயிறு அடுத்த மாதம் 15-ந்தேதி கரும்பு பயிருக்கு 31 ஆகஸ்டு 2022 காப்பீடு செய்ய கடைசி நாள் ஆகும்.

எனவே விவசாயிகள் உடனடியாக அருகில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகி உரிய ஆவணங்களான கணினி சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் உரிய காப்பீடு கட்டண தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறுங்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story