வாலிபர் அடித்து கொலை


வாலிபர் அடித்து கொலை
x
தினத்தந்தி 13 Jan 2022 12:01 PM GMT (Updated: 13 Jan 2022 12:01 PM GMT)

தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
வாலிபர்
தூத்துக்குடி தாளமுத்துநகர் சமீர் வியாஸ் நகரை சேர்ந்தவர் லூயிஸ் பெட். இவருடைய மகன் அலெக்ஸ் (வயது 31). இவருக்கு இளவரசி என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 
அலெக்ஸ் தாளமுத்துநகரை சேர்ந்த ஒருவரிடம் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் அலெக்ஸ் வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
பிணமாக கிடந்தார்
இந்த நிலையில் தூத்துக்குடி முருகேசன்நகர் காட்டுப்பகுதியில் கம்பி, கல்லால் தாக்கப்பட்டு, ரத்த காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் அலெக்ஸ் பிணமாக கிடந்தார். அந்த பகுதியில் 50 லிட்டர் கேன்களும் 4 எண்ணம் கிடந்தன.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அலெக்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அடித்துக்கொலை
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, அலெக்ஸ் கடந்த வாரம் குடிபோதையில் ஒரு காரின் கண்ணாடியை உடைத்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கும், அவருடன் வேலை பார்க்கும் மற்றொரு தொழிலாளியான நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த ஜான் (30) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த முன்விரோதம் காரணமாக ஆத்திரம் அடைந்த ஜான், முருகேசன்நகர் காட்டுப்பகுதியில் வைத்து கல் மற்றும் கம்பியால் அலெக்சை அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருட்டு வழக்கில் தொடர்பு
மேலும், தலைமறைவாக உள்ள ஜானை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அலெக்ஸ் மீது தூத்துக்குடியில் 22 திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story