தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பா.ஜனதா நிர்வாகி 2 பேர் கைது


தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பா.ஜனதா  நிர்வாகி  2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2022 1:07 PM GMT (Updated: 13 Jan 2022 1:07 PM GMT)

தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பா ஜனதா நிர்வாகி 2 பேர் கைது

பல்லடத்தில் தள்ளுவண்டி வியாபாரியை கொடூரமாக தாக்கிய பா.ஜனதா நிர்வாகி  2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து  போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
வியாபாரி மீது தாக்குதல்
 திருப்பூர் மாவட்டம் பல்லடம் பா.ஜ.க சார்பில் பஞ்சாப் மாநில அரசை கண்டித்து மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் பல்லடம் பஸ் நிலையம் முன்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தை ஒட்டிய பகுதியில் தள்ளுவண்டியில் பல்லடம் மாணிக்காபுரம் பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரி முத்துசாமி வயது 56 என்பவர் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி,  பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரை விரட்டிச் சென்று தாக்கத் தொடங்கினர்.
 அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பல்லடம் போலீசார் வியாபாரியை காப்பாற்றி அங்கிருந்த செல்போன் கடைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக அமர வைத்தனர்.   போலீசாரின் பாதுகாப்பையும் மீறி கடைக்குள் புகுந்த  பா.ஜனதாவினர் முத்துசாமியை காலால் உதைத்து, கைகளால் சரமாரியாக தாக்கவும் தொடங்கினர். இதையடுத்து போலீசார் முத்துசாமியை  பத்திரமாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பா.ஜனதா நிர்வாகிகள்  2 பேர் கைது 
 இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்த இருந்த பலரும் தங்களது செல்போன் மூலம் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்டனர். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மாவட்ட பா.ஜனதா இளைஞரணி நிர்வாகி ரமேஷ் குமார், பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் ராஜ்குமார் உள்பட  7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில்  ரமேஷ் குமார் மற்றும் ராஜ்குமார் ஆகிய  2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 2 பேரையும்  பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பா.ஜனதா நிர்வாகிகள்  5 பேரை  தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள். 

Next Story