முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு


முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 1:30 PM GMT (Updated: 13 Jan 2022 1:30 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

 தேனி: 

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 137.45 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 160 கனஅடியாக உள்ளது.

நேற்று காலை முதல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதில் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 65 கனஅடி தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக திறக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story