கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரசால் தனித்து வெற்றிபெற முடியாது-சிவசேனா சொல்கிறது
கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரசால் தனித்து வெற்றிபெற முடியாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை,
கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரசால் தனித்து வெற்றிபெற முடியாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
காங்கிரசுடன் பேச்சுவார்த்தை
கோவா மாநிலத்தில் அடுத்த மாதம் 14-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் மும்முரமாகி வருகின்றன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்ட சிவசேனா அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த கூட்டணி திட்டம் நிறைவேறவில்லை என்று தெரிகிறது. இதனால் காங்கிரஸ் மீது சிவசேனா அதிருப்தியில் உள்ளது.
இது குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று கூறியதாவது:-
ஒற்றை இலக்கை தாண்ட முடியாது
கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். அக்கட்சியின் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் முக்கிய கட்சிகளான நாங்கள்(சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ்) காங்கிரசுக்கு ஆதரவளிக்க முன்வந்தோம். ஆனால் காங்கிரஸ் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. தனித்து போட்டியிட்டால் கோவாவில் காங்கிரஸ் கட்சியால் ஒற்றை இலக்கத்தை தாண்ட முடியாது.
வேறுபட்ட கருத்து
அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் மாநில தலைவர்களுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, கோவா மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாத 10 சட்டமன்ற தொகுதிகளை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் கோவா பார்வர்டு கட்சிக்கு ஒதுக்கலாம் என்று தெரிவித்தேன்.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூட்டணி யோசனைக்கு சாதகமாக இருந்தார். ஆனால் உள்ளூர் காங்கிரஸ் தலைமை வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டியத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி ஆட்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சிவசேனா ஆதரவு
இதேபோல கோவா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் சட்டமன்ற தேர்தல் களத்தில் இறங்க முடிவு செய்தால் அவரை ஆதரிக்க சிவசேனா தயாராக இருப்பதாக சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தேர்தலில் போட்டியிட உத்பால் துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட தைரியம் வேண்டும். அவர் அந்த முடிவை எடுத்தால், சிவசேனா அவருக்கு ஆதரவளிக்கும்” என்றார்.
------------------
Related Tags :
Next Story