கரும்பு, மஞ்சள் குலை விற்பனை களை கட்டியது


கரும்பு, மஞ்சள் குலை விற்பனை களை கட்டியது
x
தினத்தந்தி 13 Jan 2022 2:09 PM GMT (Updated: 13 Jan 2022 2:09 PM GMT)

தேனி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, மஞ்சள் குலை விற்பனை களை கட்டியது.

தேனி: 


பொங்கல் பண்டிகை
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் தைப் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றால் செங்கரும்பும், மஞ்சள் குலையும் முக்கிய அங்கம் வகிக்கும்.

தேனி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனை நேற்று களை கட்டியது. தேனி நகரில் மதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை ஆகிய பிரதான சாலைகளின் ஓரங்களில் செங்கரும்பு, மஞ்சள் குலை போன்றவற்றை பலர் அடுக்கி வைத்து விற்பனை செய்தனர். மக்களும் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

மக்கள் கூட்டம்
அதுபோல், வீடுகளில் கட்டுவதற்காக மாவிலை, பிரண்டை, வேப்பிலை, கூரைப்பூ, ஆவாரம்பூ ஆகியவை அடங்கிய காப்பு கட்டுகள் விற்பனையும் மும்முரமாக நடந்தது. வழிபாட்டுக்கு வாழை இலை, வெற்றிலை, பாக்கு, பழங்கள், பூக்கள் ஆகியவற்றையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதனால், இத்தகைய பொருட்கள் விற்பனை கடைகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் சில்லரை விற்பனையில் ஒரு ஜோடி கரும்பு ரூ.90 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.80 முதல் ரூ.100-க்கும், காப்புக்கட்டு ஒன்று ரூ.15-க்கும் விற்பனையானது.

தேனி உழவர் சந்தை மற்றும் தேனி தினசரி சந்தையிலும் காய்கறிகள் வாங்க மக்கள் குவிந்தனர். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் சந்தைகளில் பலர் முக கவசம் அணியாமல் உலா வந்தனர். இது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story