46 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்


46 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jan 2022 3:16 PM GMT (Updated: 13 Jan 2022 3:16 PM GMT)

பரமக்குடி அருகே லாரியில் கடத்திய 46 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். தலைமறைவான முக்கிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம், 
 பரமக்குடி அருகே லாரியில் கடத்திய 46 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். தலைமறைவான முக்கிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
ரகசிய தகவல்
பரமக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணராஜா தலைமையில் தலைமை காவலர்கள் முருகேசன், ஜமீன்தார் ஆகியோர் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது வசந்தபுரம் வழியாக வந்த மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மொத்தம் 46 மூடைகளில் 2 ஆயிரத்து 70 கிலோ ரேஷன் அரிசியை பரமக்குடி பகுதியில் வீடுவீடாக சென்று விலைகொடுத்து வாங்கி சேகரித்து கொண்டு சென்றது தெரிந்தது. 
ஒருவர் கைது
வாகனத்தில் இருந்தவரிடம் விசாரித்தபோது அவர் பரமக்குடி அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன் மகன் கருப்பசாமி (வயது 40) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து லாரியுடன், அரிசியை பறிமுதல் செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் இந்த அரிசியை சிவகங்கை இரட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகு என்பவரின் மகன் செல்வகுமார் என்பவர் பரமக்குடி பகுதியில் அரிசியை சேகரித்து லாரியில் ஏற்றி மதுரைக்கு கொண்டுவருமாறு கூறி முன்னால் சென்றுவிட்டாராம்.
மேற்கண்ட செல்வகுமார் மதுரையில் இந்த அரிசியை அரைத்து நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தீவனத்திற்காக விற்பதை வழக்கமாக கொண்டுள்ளாராம். இதன்படி இந்த அரிசியை அரைப்பதற்காக மதுரைக்கு கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட அரிசியை போலீசார் கமுதக்குடி நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். பிடிபட்ட கருப்பசாமியை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்-2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் போலீஸ் நிலைய காவலில் விடுதலை செய்தனர். தலைமறைவான செல்வகுமாரை தேடிவருகின்றனர். ராமநாதபுரம் அருகே 2 ஆயிரத்து 70 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றதை போலீசார் மடக்கி பிடித்து கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story