விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கரும்பு, மஞ்சள் கொத்துகளை வாங்க குவிந்த பொது மக்கள் போக்குவரத்து நெரிசல்


விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கரும்பு, மஞ்சள் கொத்துகளை வாங்க குவிந்த பொது மக்கள்  போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 13 Jan 2022 4:34 PM GMT (Updated: 13 Jan 2022 4:34 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் கரும்பு, மஞ்சள் கொத்துகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விழுப்புரம், 

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல் பானைகள் மற்றும் கரும்புகள், மஞ்சள் கொத்துக்கள் விழுப்புரம் நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
குறிப்பாக விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் உள்ள மார்க்கெட்டுகள் மற்றும் நேருஜி சாலை, பழைய பஸ் நிலையம், திரு.வி.க. வீதி ஆகிய இடங்களில் மண் பானைகள், கரும்புகள், மஞ்சள் கொத்துக்கள் மற்றும் சிறுவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும், காய்கறி வகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

அலைமோதிய மக்கள்

இந்த பொருட்களை விழுப்புரம் நகரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர். இதனால் பொங்கல் பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
பொங்கல் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் விழுப்புரம் நகரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகனங்கள் அனைத்தும் சீரான வேகத்தில் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசார் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டபோதிலும் நேற்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த போக்குவரத்து நெரிசல் நீடித்தது. இதேபோல் திண்டிவனம், செஞ்சி உள்பட மாவட்டத்தில் உள்ள கடைவீதிகளில் எங்கு பார்த்தாலும் திருவிழா கூட்டம்போல் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஸ்தம்பித்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

பொங்கல் பண்டிகையை யொட்டி கள்ளக்குறிச்சியில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மந்தைவெளி, சுந்தர விநாயகர் கோவில் தெரு, குளத்து மேட்டு தெரு, அண்ணாநகர், ஏம்ப்பேர் ஆகிய பகுதியில் கரும்பு, மஞ்சள்கொத்து, கூலாப்பூ, மாங்கொத்து, பூ, தேங்காய் போன்ற பொருட்களின் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. 
இதில் ஒரு ஜோடி கரும்பு குறைந்த பட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.80 வரைக்கும், மஞ்சள் கொத்து(2 செடிகள்) குறைந்த பட்சம் ரூ.20 முதல் அதிகபட்சம் ரூ.40 வரைக்கும், மாங்கொத்து, கூலாப்பூ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை கள்ளக்குறிச்சி மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அதேபோல் மாட்டுப்பொங்கலுக்கு தேவையான வர்ணம் மற்றும் வண்ண கயிறு, பூஜை பொருட்கள் விற்பனையும் சூடுபிடித்து வருகிறது.

Next Story