காதல் திருமணம் செய்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Jan 2022 5:25 PM GMT (Updated: 13 Jan 2022 5:31 PM GMT)

தேவதானப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரியாமல் பிணத்தை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி : 

போக்சோவில் வாலிபர் கைது
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்கனி. இவருடைய மகள் ஜெயசந்தியா (வயது 17). அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சஞ்சய் ராஜ் (19). இவர்கள் இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.  
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். 

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக சஞ்சய் ராஜை ேபாக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்டு கெங்குவார்பட்டியில் உள்ள தனியார் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர்.

சிறுமி தற்கொலை 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்த ஜெயசந்தியாவை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீட்டில் இருந்த சிறுமி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயசந்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த பெற்றோர், சிறுமி தூக்கிட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், ஜெயசந்தியாவின் உடலை தகனம் செய்ய முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கெங்குவார்பட்டி மயானத்துக்கு சிறுமியின் உடலை கொண்டு சென்றனர். அங்கு சடங்குகளை செய்த பின்னர், சிறுமியின் உடலை தகனம் செய்து கொண்டிருந்தனர். 

பாதி எரிந்த நிலையில் மீட்பு
இதுபற்றி தகவலறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எரிந்து கொண்டு இருந்த சிறுமியின் உடலை கைப்பற்றினர். பின்னர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். 

அவர்கள் அங்கு வந்து பாதி எரிந்த நிலையில் இருந்த சிறுமியின் உடலில் இருந்து சில பாகங்களை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடலை எரிக்க முயன்ற பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story