பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்


பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க  கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்
x
தினத்தந்தி 13 Jan 2022 5:52 PM GMT (Updated: 13 Jan 2022 5:52 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

வேலூர்

பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்புகிறது. பொங்கல் பண்டிகைக்கு அனைத்து வகை காய்கறிகள் உள்பட பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும் கரும்பும், மஞ்சள் குலையும் முக்கியமான இடத்தை பிடிப்பதாக உள்ளது. வேலூர் கிருபானந்தவாரியார் சாலை, அண்ணாசாலையில் கரும்பு, மஞ்சள் குலைகள், பனங்கிழங்கு போன்றவைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே விற்பனைக்கு வரத்தொடங்கி விட்டன. 

சர்க்கரைவள்ளி கிழங்கு, பூசணிக்காய், வாழைக்காய், கருணை கிழங்கு போன்றவை விற்பனைக்கு வந்திருந்தது. மேற்கண்ட பொருட்கள் பெரும்பாலும் ரோடுகளின் ஓரங்களிலேயே மொத்தமாகவும், சில்லறை விலையிலும் விற்பனை செய்யப்பட்டன. விற்பனையும் அமோகமாக இருந்தது.

பொதுமக்கள் கூட்டம்

20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு ஜோடி கரும்பு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல மஞ்சள் குலை ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் பலர் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க ஆலைமோதினர். கிருபானந்தவாரியார் சாலையில் அதிகளவிலான மக்கள் கூட்டம் இருந்தது. மேலும் புதிய பஸ் நிலையம், கிரீன்சர்க்கிள் முதல் பாகாயம் வரையிலான காட்பாடி சாலை, அண்ணாசாலை, பெங்களூரு சாலை, ஆரணி சாலை, தொரப்பாடி சாலை, பில்டர்பெட் ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பண்டிகை அன்று வீட்டின் முன்பு பெண்கள் கோலம் போடுவது வழக்கம். அதில் வண்ணம் கொடுப்பதற்காக பல நிறங்களில் பொடிகள் விற்பனை செய்யும் கடைகளும் ஏராளமாக காணப்பட்டன. வண்ணப் பொடிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். துணிக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பானைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பொங்கல் பானை விற்பனை குறைவாக இருந்தது.

காய்கறிகளின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
காய் கறிகள்

தக்காளி ரூ.50, மொச்சை ரூ.60, சர்க்கரைவள்ளி கிழங்கு ரூ.40, கத்தரிக்காய் ரூ.60, கேரட் ரூ.40, முள்ளங்கி ரூ.10, கருணைக்கிழங்கு ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.30, சேப்பங்கிழங்கு ரூ.30, பூசணிக்காய் ரூ.30 என விற்கப்பட்டது.
பூக்களை பொறுத்தவரை மல்லி ரூ.700, முல்லை ரூ.700, சாமந்தி ரூ.100 முதல் 250 வரையிலும், கனகாம்பரம் ரூ.1,200, துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும் விற்பனையானது.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு மக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் குற்ற நடவடிக்கைகளை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இதேபோல மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story