திருப்பத்தூர் அருகே மனைவியிடம் தகராறு செய்த அண்ணன் வெட்டிக் கொலை


திருப்பத்தூர் அருகே மனைவியிடம் தகராறு செய்த அண்ணன் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 13 Jan 2022 5:55 PM GMT (Updated: 13 Jan 2022 5:55 PM GMT)

திருப்பத்தூர் அருகே குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த அண்ணனை வெட்டிக் கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்த அண்ணனை வெட்டிக் கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் தகராறு

திருப்பத்தூரை அடுத்த ஆவல்நாய்க்கன்பட்டி சோளச்சூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 42). இவரது தம்பி கனகராஜ் (40). இவர்கள் மரம் ஏறும் தொழிலாளிகள். நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்து கனகராஜ் மனைவி பூங்கொடி (39) பூ கட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது குடிபோதையில் வந்த கோவிந்தராஜ் வழியில் அமர்ந்து கொண்டிருந்த பூங்கொடியிடம் தன்னுடைய வீட்டிற்கு செல்ல வழிவிடுமாறு கேட்டுள்ளார்.

இது சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 
 குடிபோதையில் இருந்த கோவிந்தராஜ், பூங்கொடியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூங்கொடி தனது கணவர் கனகராஜிக்கு போன்மூலம் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கனகராஜ் உடனடியாக வீட்டுக்கு வந்துள்ளார்.

வெட்டிக் கொலை

கோபத்தின் உச்சத்தில் இருந்த அவர், போதையில் இருந்த அண்ணன் கோவிந்தராஜை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் கந்திலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story