கள்ளழகர், கூடல் அழகர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


கள்ளழகர், கூடல் அழகர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 6:03 PM GMT (Updated: 13 Jan 2022 6:03 PM GMT)

அழகர்கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் விழா நேற்று விமரிசையாக நடந்தது.

மதுரை
அழகர்கோவில் உள்பட மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் விழா நேற்று விமரிசையாக நடந்தது.
சொர்க்கவாசல் திறப்பு விழா
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் நேற்று அதிகாலையில் 5.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அந்த வழியாக பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு வந்தார். மேள, தாளம் முழங்க வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் பூமாலை அலங்காரப் பல்லக்கில் கள்ளழகர் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்தார். பின்னர் அங்குள்ள சயன மண்டபத்தை சுற்றி வலம் வந்து, அதே மண்டபத்தில் எழுந்தருளினார்.
முன்னதாக நம்மாழ்வார் பரமபத வாசல் வழியாக பெருமாளை வரவேற்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுந்தரராச பெருமாள் அருள்பாலித்தார்.
தல்லாகுளம்
இந்தக்கோவிலின்உப கோவிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலிலும் காலை 5.40 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பின்னர் நேற்று காலை 7 மணிக்கு மேல் வழக்கம்போல் பக்தர்கள் இரு கோவில்களிலும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை கமிஷனர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
திருமோகூர்
மதுரை ஒத்தக்கடையை அடுத்த திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் நேற்று மாலை 4 மணியளவில் வழித்துணைப்பெருமாள், சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். முன்னதாக ஆழ்வார்பாசுரங்கள் பாடப்பட்டன.
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலிலும் நேற்று மாலை 4.20 மணி அளவில் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் வந்து, கோவிலைச்சுற்றி வலம் வந்தார். இதனால் 3.45 மணியில் இருந்து 5 மணி வரை அந்த பகுதியில் பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்னர் வழக்கம் போல் தரிசனம் செய்தனர்.
========

Next Story