10-ம் வகுப்பு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து சாவு


10-ம் வகுப்பு மாணவர் பள்ளியில்  மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 13 Jan 2022 6:03 PM GMT (Updated: 13 Jan 2022 6:03 PM GMT)

மதுரையில் தனியார் பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை, ஜன.14-
மதுரையில் தனியார் பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயங்கி விழுந்த மாணவர்
மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் சரவணபாண்டியன், டிரைவர். இவரது மகன் சந்தோஷ்(வயது 15), அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல் அவர் பள்ளிக்கு சென்றார். அங்கு ஒரு அறையில் உள்ள மேஜையை வேறு அறைக்கு மாற்றுவதற்காக சந்தோஷ் சக மாணவர்களுடன் மேஜையை தூக்கி உள்ளார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு அவர் அங்கேயே கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அதை பார்த்து பதற்றம் அடைந்த ஆசிரியர்களும், மாணவர்களும் உடனே அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சந்தோஷின் பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
திடீர் சாவு
கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அவர்கள் மாணவனை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது சந்தோஷ் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. 
இதையடுத்து மாணவனின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததால் மாணவர் இறந்ததாக கூறி ஆத்திரம் அடைந்தனர். மேலும் பள்ளி நிர்வாகம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் மாணவன் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரும் மாணவனின் உடலை உறவினர்கள் வாங்க முன்வரவில்லை. சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலை வாங்கினர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பள்ளி ஆசிரியர்கள், உடன் படிக்கும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அதில் சந்தோஷ் மேஜையை தூக்கியபோது மயங்கி விழுந்தது பதிவாகி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், மாணவர் இறப்புக்கு என்ன காரணம் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-----------------

Next Story