தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 13 Jan 2022 6:17 PM GMT (Updated: 13 Jan 2022 6:17 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான பாலம் 
திருச்சி மாவட்டம், தொட்டியம், கொசவம்பட்டி சாலையில் உள்ள எஸ்.பி.எஸ். காலனியில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால் பாலம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.  இதனால் இந்த பாலத்தின் வழியாக செல்பவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். கனரக வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக செல்லும்போது பாலம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கொசவம்பட்டி, திருச்சி. 

பராமரிக்கப்படாத கழிப்பறை 
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு பகுதிகளில் மகளிர் கழிப்பிடம், பொது கழிப்பிடங்கள் உள்ளது. ஆனால் தற்போது அதில் பல கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் பயன்பாடில்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கழிப்பிடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராஜேந்திரன், பெரம்பலூர்.

பஸ் பயணிகள் அவதி 
திருச்சி மாவட்டம் முசிறி மணப்பாறையிலிருந்து இரவு நேரங்களில் முசிறி வரும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் முசிறி புதிய பஸ் நிலையம் வராமல் முசிறி பைபாஸ் பாலத்தில் பயணிகளை இறக்கி விடுகிறார்கள். இதனால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும்  கையில் மூட்டை முடிச்சுகளுடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வருபவர்கள் மற்றும் முதியவர்கள்  மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு மணப்பாறையில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் முசிறி புதிய பஸ் நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முசிறி, திருச்சி. 

சாலை சீரமைக்கப்படுமா? 
அரியலூரில் இருந்து கள்ளகுறிச்சி செல்லும்  தார் சாலை மண் சாலையாக மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழைபெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அரியலூர். 

வீணாகும் குடிநீர் 
திருச்சி லூர்து சாமி பூங்கா எதிரில் உள்ள இ.பி. சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் செல்ல வேண்டிய இடத்திற்கு போதுமான குடிநீர் செல்லாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வீணாகும் குடிநீர் அருகில் தேங்கி நிற்பதினால் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி. 

சிதிலமடைந்து காணப்படும் கோவில் 
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், லால்குடி பஸ் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சாமவேதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும்  கோவில் பிரதான கோபுரத்தின் மேல் செடிகள் முளைத்துள்ளன. அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் செடி கொடிகள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு பக்தர்கள் எளிதில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருமங்கலம், திருச்சி. 




Next Story