கோதண்டராமசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


கோதண்டராமசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 6:28 PM GMT (Updated: 13 Jan 2022 6:28 PM GMT)

கோதண்டராமசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

தாமரைக்குளம்:

சொர்க்கவாசல் திறப்பு
அரியலூரில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் நாச்சியார் திருக்கோலத்துக்குப் பின், கோதண்டராமசாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து, சுவாமியின் திருவீதியுலா நடைபெறுகவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு சுவாமி வீதி உலா நடைபெறவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை கருவறையில் இருந்து புறப்பட்ட கோதண்டராமசாமி முன்பகுதி மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து நம்மாழ்வார் பரமபதவாசல் எதிரே எழுந்தருளிய பின்னர், பரமபதவாசல் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.
பக்தர்கள் தரிசனம்
அப்போது கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்த சில பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்களை எழுப்பினர். சொர்க்கவாசல் வழியாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வெளியே வந்து கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். பின்னர் தசாவதார மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நேரத்தில் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பின்னர் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி அளிக்கப்பட்டு முக கவசத்துடனும், சமூக இடைவெளியுடனும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரவு 8 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க, சுவாமி வீதி உலா நடைபெறவில்லை.

Next Story