மாமியார் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மாமியார் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Jan 2022 6:52 PM GMT (Updated: 13 Jan 2022 6:52 PM GMT)

சுசீந்திரம் அருகே மாமியார் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் அருகே மாமியார் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பெண்
சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரூபன் செல்வகுமார். இவருக்கும் வள்ளியூர் வடலிவிளை விசுவாசபுரத்தை சேர்ந்த ஆலிஸ் (வயது 25) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷஹானா ராணி என்ற மகள் உள்ளார். ரூபன் செல்வகுமார், மனைவி, மகள் மற்றும் தனது அம்மா செல்வராணியுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.
 இந்தநிலையில் மாமியார் செல்வராணி அடிக்கடி ஆலிசை திட்டியதாகவும், இதனை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக ஆலிஸ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். 
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஆலிஸ் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே, அவரை ரூபன் செல்வகுமார் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆலிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுபற்றி கணவர் ரூபன் செல்வகுமார், ஆலிசின் அண்ணன் ஜெபக்குமாருக்கு தெரிவித்தார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெபகுமார் மற்றும் அவரது தாயார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து ஆலிசின் உடலை பார்த்து கதறி அழுதனர். 
 ஆர்.டி.ஓ. விசாரணை
இதுகுறித்து, ஆலிசின் அண்ணன் ஜெபக்குமார் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த ஆலிசுக்கு திருமணம் நடந்து 2¼ ஆண்டு ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
மாமியார் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story