தஞ்சை பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


தஞ்சை பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 8:19 PM GMT (Updated: 13 Jan 2022 8:19 PM GMT)

வைகுண்ட ஏகாதசியையொட்டி தஞ்சை பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்:
வைகுண்ட ஏகாதசியையொட்டி தஞ்சை பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று வைணவ திருத்தலங்களில் எல்லாம் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி தினத்தன்று இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால் இந்த பிறவியில் புகழ் பெற்று நோயற்ற வாழ்வினை வாழலாம் என்பது ஐதீகம்.
தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்புவிழா நேற்றுஅதிகாலை நடந்தது. அதன்படி தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 10 நாட்கள் பகல் பத்து உற்சவம் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்றுஅதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
பக்தர்கள் பரவசம்
இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் பெருமாளுக்கு தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்களும் சொர்க்கவாசலை கடந்து வந்தனர். சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாள், மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர்.
மானம்புச்சாவடி
இதேபோல் தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலிலும் நேற்றுகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை விசேஷ திருமஞ்சன சேவையும், தீபாராதனையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பெருமாள் சொர்க்கவாசலை கடந்து சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் வெண்ணாற்றங்கரையில் உள்ள மாமணிக்கோவில், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், கீழவீதி வரதராஜ பெருமாள் கோவில் உள்பட தஞ்சையில் உள்ள 8 பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story