அந்தியூர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை; 15 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது


அந்தியூர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை; 15 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 13 Jan 2022 8:40 PM GMT (Updated: 13 Jan 2022 8:40 PM GMT)

அந்தியூர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் 15 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

அந்தியூர்
அந்தியூர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் 15 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 
கொட்டி தீர்த்த மழை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பகலில் வெயில் அடித்து வந்தது. இரவில் பனிப்பொழிவு காணப்பட்டது. 
இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை 2 மணிநேரம்   நீடித்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அந்தியூர் பகுதியில் உள்ள நீரோடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஓடை பகுதியிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் பாலத்தின் அருகில் தெப்பக்குளம் வீதியில் உள்ள 15 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதன்காரணமாக வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.
 உடனே அவர்கள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் வீடுகளில் புகுந்த தண்ணீரை பாத்திரங்கள் மூலம் எடுத்து விடிய விடிய  வெளியேற்றினர். வெள்ளம் புகுந்ததால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள், பாடப்புத்தகங்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கி நாசம் ஆனது. 
58 மில்லி மீட்டர்
அதுமட்டுமின்றி அந்தியூர் கோட்டை பகுதியில் உள்ள ஓடையின் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் அந்த பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளையும் வெள்ள நீர் சூழ்ந்தது. 
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் 58 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. ஏற்கனவே கடந்த மாதத்தில் ெபய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 33.33 அடியில் இருந்து வந்தது. நேற்று அதிகாலை பெய்த மழைகாரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் உபரிநீரானது அங்குள்ள நீரோடை வழியாக அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரிகளுக்கு சென்றது. 


Next Story