வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 8:44 PM GMT (Updated: 13 Jan 2022 8:44 PM GMT)

கர்நாடகத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சொர்க்க வாசல் வழியாக சென்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பெங்களூரு: கர்நாடகத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சொர்க்க வாசல் வழியாக சென்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி நேற்று கொண்டாடப்பட்டது. இந்த வைகுண்ட ஏகாதசியையொட்டி பெங்களூருவில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் சொர்க்க வாசலும் திறக்கப்பட்டது. பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக்கில் உள்ள கைலாச வைகுண்ட மகாஷேத்ராவில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அந்த கோவிலில் உள்ள பெருமாள் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அந்த பெருமாள் சிலையை பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் கோவிலில் உள்ள சிவன், முருகன் உள்ளிட்ட சிலைகளையும் பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் வெளியே வந்தனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி அந்த கோவிலில் இசை கச்சேரியும் நடந்தது. இதுபோல பெருமாள் கோவில் அருகே உள்ள நரசிம்மர் ஆலயத்திலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. அந்த கோவிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இடைவெளி விட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

பிரசாதம்

இதுபோல பெங்களூரு ராஜாஜிநகர் 1-வது பிளாக்கில் உள்ள பிரசித்தி பெற்ற இஸ்கான் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபட்டனர். மேலும் பெருமாளுக்கு சிறுவர்கள், சிறுமிகள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

அந்த கோவிலிலும் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட்டது. இதுதவிர பெங்களூருவில் உள்ள மற்ற பெருமாள் கோவில்களிலும், மைசூரு, சிவமொக்கா, கோலாா் தங்கவயல் உள்பட கர்நாடகத்தில் உள்ள பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story