பிரபல ரவுடியை கொன்ற வழக்கில் 4 பேர் கைது


பிரபல ரவுடியை கொன்ற வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2022 8:46 PM GMT (Updated: 13 Jan 2022 8:46 PM GMT)

நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில், 
நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ரவுடி வெட்டிக்கொலை
நாகர்கோவில் அருகே உள்ள குஞ்சன்விளை வைகுண்டர் வீதியை சேர்ந்தவர் சுந்தர மகாலிங்கம். இவரது மகன் தங்க கிருஷ்ணன் (வயது43), டிரைவர். இவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருந்து வந்தார். தங்க கிருஷ்ணனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி இரவு தங்ககிருஷ்ணன் குஞ்சன்விளையில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். 
கள்ளக்காதல் விவகாரம்
அப்போது, தங்க கிருஷ்ணனின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த வக்கீல் பிரபுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதுகுறித்து தங்க கிருஷ்ணன், பிரவிடம் தட்டி கேட்டார். மேலும், இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்துள்ளனர்.  இந்த நிலையில் சம்பவத்தன்று பிரபு, தங்க கிருஷ்ணனை சமதானம் பேசுவதற்காக அழைத்து சென்று தனக்கு தெரிந்த ரவுடி கும்பலுடன் சேர்ந்த வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. 
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் கலைநகர் பகுதியை சேர்ந்த சுதன் என்ற நண்டு சுதன், குஞ்சன்விளையை சேர்ந்த மகேஷ் ராஜன், வக்கீல் பிரபு, மறவன்குடியிருப்பை சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் கண்டால் தெரியும் ஒரு நபர் உள்பட 5 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். 
4 பேர் கைது
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தேடி வந்தவர்களில் கோட்டார் கலைநகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி சுதன் என்ற நண்டு சுதன் (31), வல்லன்குமரன்விளை சிதம்பரனார் தெருவை சேர்ந்த பிரவீன் (23), குஞ்சன்விளை வைகுண்டர் வீதியை சேர்ந்த மணிகண்டபிரபு (27), வட்டவிளை தங்கவேல் காம்பவுண்டை சேர்ந்த விஷ்ணு (26) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம், கள்ளக்காதல் விவகாரத்தில் வக்கீல் பிரபுவின் தூண்டுதல் பேரில் கொலையை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.  மேலும், தலைமறைவாக உள்ள வக்கீல் பிரபு, மகேஷ் ராஜன், ஜெகதீஷ் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story