பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 9:03 PM GMT (Updated: 13 Jan 2022 9:03 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி:-
தர்மபுரி மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பு
தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்தந்த கோவில்களில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. விழாவில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் விமலா, ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
மணியம்பாடி
தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், குமாரசாமிப்பேட்டை சென்னகேசவப் பெருமாள் கோவில், பழைய தர்மபுரி வரத குப்பம் வெங்கட்ரமண சவாமி கோவில், அதியமான் கோட்டை சென்ராயப் பெருமாள் சாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயண சவாமி கோவில், சோகத்தூர் திம்மராய பெருமாள் சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதேபோன்று மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்ரமண சவாமி கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. பின்னர் சொர்க்கவாசல் வழியாக சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேளதாளம் முழங்க...
இதேபோல் தேங்காமரத்துப்பட்டி ஸ்ரீ வெங்கட்ரமண சவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவில் ஊர் பொதுமக்கள் சார்பில் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சக்தி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள்செய்திருந்தனர்.

Next Story