பெங்களூருவில் வேகமாக பரவும் கொேரானா: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய கட்டுப்பாடு


பெங்களூருவில் வேகமாக பரவும் கொேரானா: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய கட்டுப்பாடு
x
தினத்தந்தி 13 Jan 2022 9:16 PM GMT (Updated: 13 Jan 2022 9:16 PM GMT)

பெங்களூரு நகரில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து பெங்களூரு மாநகராட்சி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு:பெங்களூரு நகரில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து பெங்களூரு மாநகராட்சி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை தீவிரமெடுக்க தொடங்கி உள்ளது. மாநிலத்தில் தினசரி பாதிப்பு. நேற்று பெங்களூருவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூரு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

சமூக இடைவெளி கட்டாயம்

* அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் வெளியே சென்று வரும்போது தங்களது உடல்வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். இதுபோல வேலைக்காரர்கள், விருந்தாளிகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நுழையும் முன்பு உடல்வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். அவர்கள் முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* ‘லிப்ட்’டில் செல்லும் போது சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். ‘லிப்ட்’டில் அடிக்கடி ப்ளீசிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* ‘லிப்ட்’டை அடிக்கடி கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* அடுக்குமாடி குடியிருப்புக்குள் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் ஒன்று கூடி நடைபயிற்சி மேற்கொள்ள கூடாது. கட்டாயம் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.

* உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம், நீச்சல் குளங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கொரோனா பரிசோதனை

* அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் குழந்தைகள் வெளியே விளையாடும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பெற்றோரும், அடுக்குமாடி குடியிருப்பு சங்க உறுப்பினர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ச்சிகள் கொண்டாடுவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் 50 பேர் மட்டும் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

* அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை ஒரே இடத்தில் சேகரித்து வைத்து அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறைக்கு, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

2 டோஸ் தடுப்பூசி

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

* வெளியூருக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று விட்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு திரும்பி வருபவர்கள் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர். முறையில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

* 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். அவர்களுக்கு ஏதாவது கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* காய்கறி வியாபாரிகள், கூரியர் மற்றும் உணவு வினியோகம் செய்யும் பிரதிநிதிகள் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தால் அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

* மருந்து, சமையல் கியாஸ், குடிநீர் வினியோகம் செய்ய வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று உறுதி செய்ய வேண்டும்.

*அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

* அடுக்குமாடி குடியிருப்புகளில் பணியாற்றும் காவலாளிகள், ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

* அடுக்குமாடி குடியிருப்புகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி செய்து இருக்க வேண்டும்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story