நடிகை ஸ்ருதி ஹரிகரன் தொடர்ந்த பாலியல் வழக்கு: நடிகர் அர்ஜூன் விரைவில் விடுவிக்கப்படுகிறார்


நடிகை ஸ்ருதி ஹரிகரன் தொடர்ந்த பாலியல் வழக்கு: நடிகர் அர்ஜூன் விரைவில் விடுவிக்கப்படுகிறார்
x
தினத்தந்தி 13 Jan 2022 9:20 PM GMT (Updated: 13 Jan 2022 9:20 PM GMT)

நடிகை ஸ்ருதி ஹரிகரன் தொடர்ந்த பாலியல் வழக்கில் இருந்து நடிகர் அர்ஜூன் விரைவில் விடுவிக்கப்பட உள்ளார். இவ்வழக்கில் நடிகர் அர்ஜூன் குற்றமற்றவர் என்று போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை கோர்ட்டு அங்கீகரித்துள்ளது.

பெங்களூரு: நடிகை ஸ்ருதி ஹரிகரன் தொடர்ந்த பாலியல் வழக்கில் இருந்து நடிகர் அர்ஜூன் விரைவில் விடுவிக்கப்பட உள்ளார். இவ்வழக்கில் நடிகர் அர்ஜூன் குற்றமற்றவர் என்று போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை கோர்ட்டு அங்கீகரித்துள்ளது.

அர்ஜூன் மீது பாலியல் வழக்கு

நடிகர் அர்ஜூன் நடித்திருந்த ‘நிபுணன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ருதி ஹரிகரன். இந்த படம் கன்னடத்தில் ‘விஸ்மயா’ என்ற பெயரில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், நிபுணன் படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு நடிகர் அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சமூக வலைத்தளத்தில் வெளியான ‘மீடு’ ஹாஷ்டேக் மூலம் நடிகை ஸ்ருதி ஹரிகரன் புகார் தெரிவித்தார். பின்னர் இதுபற்றி பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்ருதி ஹரிகரன் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசார் நடத்திய விசாரணையின் போது, நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக நடிகர் அர்ஜூனுக்கு எதிராக எந்த ஒரு சாட்சியும், ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து, இந்த பாலியல் வழக்கில் நடிகர் அர்ஜூன் குற்றமற்றவர் என்று கூறி பெங்களூரு 8-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த ஆண்டு (2021) கப்பன்பார்க் போலீசார் ‘பி’ அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்கள்.

விடுவிக்கப்படுகிறார்

இதையடுத்து, போலீசாா் தாக்கல் செய்துள்ள ‘பி’ அறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் அளித்திருந்த நடிகை ஸ்ருதி ஹரிகரன், போலீசாரின் ‘பி’ அறிக்கைக்கு எதிராக கோர்ட்டில் ஆட்சேபனை தெரிவித்து மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை.

மாறாக அவர் நேற்று கோர்ட்டில் விசாரணைக்கும் ஆஜராகவில்லை. இதையடுத்து, நடிகை ஸ்ருதி ஹரிகரன் தொடர்ந்த பாலியல் வழக்கில், நடிகர் அர்ஜூன் குற்றமற்றவர் என்றும், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் போலீசாரின் ‘பி’ அறிக்கையை நீதிபதிகள் அங்கீகரித்து உத்தரவிட்டனர். இதனால் இவ்வழக்கில் இருந்து நடிகர் அர்ஜூன் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story