சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்


சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Jan 2022 10:52 AM GMT (Updated: 14 Jan 2022 10:52 AM GMT)

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தரமாக நடைபெறுகிறதா? என்பதை மாநகராட்சி தலைமை என்ஜினீயர் என்.மகேஷன் நள்ளிரவில் அதிரடி ஆய்வு செய்தார்.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

பெருநகர சென்னை மாநகராட்சி பராமரிப்பின் கீழ் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் உள்ளன. வடகிழக்கு பருவமழையால் பல சாலைகள் சேதம் அடைந்தன. இந்த சாலைகளை தரமான முறையில் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்பேரில் ரூ.213 கோடி மதிப்பில் 312 கி.மீ. நீளம் கொண்ட 1,656 பேருந்து சாலைகளும், ‘சிங்கார சென்னை 2.0’ உள்பட பல்வேறு திட்ட நிதியின் கீழ் உள்புற சாலைகளும் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தலைமை என்ஜினீயர் ஆய்வு

அந்தவகையில் சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குட்பட்ட அசோக் நகர் 11-வது அவென்யூவில் மழையால் பாதிக்கப்பட்ட 1 கி.மீ. சாலை ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் அளவு உயராமல் இருக்கும் வகையில் பழுதான சாலை மில்லிங் செய்து அகற்றப்பட்டு வருகிறது.

புதுப்பிக்கப்படும் இந்த சாலையின் கனம், தரம், தட்பவெப்ப நிலைகள் சரியான அளவில் இருக்கிறதா? என்பதை சென்னை மாநகராட்சி தலைமை என்ஜினீயர் என்.மகேஷன் நள்ளிரவில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். தார் கலவை, ஜல்லி கற்கள் போன்றவற்றின் தரத்தையும் துல்லியமாக ஆய்வு செய் தார். மழைக்காலங்களின்போது இந்த சாலையில் தண்ணீர் தேங்காமல், மழைநீர் கால்வாய்களுக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டு இருக்கிறதா? என்பதை நவீன கருவிகள் மூலம் பரிசோதித்தார்.

உத்வேகம்

தற்போது சீரமைக்கப் படும் சாலை நீண்ட காலம் நீடித்து நிலைத்து இருக்க வேண்டும். மிக கன மழையையும் தாங்கும் வகையில் உறுதித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு தலைமை என்ஜினீயர் என்.மகேஷன் அறுவுறுத்தல்களை வழங்கினார்.

மாநகராட்சியின் தலைமை என்ஜினீயரே நள்ளிரவு என்றும் பாராமல் களப்பணி ஆய்வில் ஈடுபட்டது மாநகராட்சி அதிகாரிகளுக்கும், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்தது.


Next Story