எண்ணூரில் அனல் மின்நிலையம் வேண்டாம் என பெண்கள் கோலம் போட்டு எதிர்ப்பு


எண்ணூரில் அனல் மின்நிலையம் வேண்டாம் என பெண்கள் கோலம் போட்டு எதிர்ப்பு
x
தினத்தந்தி 14 Jan 2022 12:07 PM GMT (Updated: 14 Jan 2022 12:07 PM GMT)

சென்னை எண்ணூரில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 660 மெகாவாட் மின் உற்பத்திக்கான விரிவாக்க பணிகள் நடைபெற திட்டமிட்டு அதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்கும் கருத்து கேட்பு கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக கருத்து கேட்பு கூட்டம் 13-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தற்போது அமலில் உள்ளதால் கருத்துகேட்பு கூட்டம் வரும் 19-ந் தேதி நடைபெறும் என 2-வது முறையாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று கருத்துகேட்பு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் எண்ணூர் சிவன் படைவீதி, காமராஜர் நகர், வள்ளுவர் நகர், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள், தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எண்ணூர் அனல் மின் நிலையம் வேண்டாம் எனக்கூறி தங்கள் வீட்டு வாசலில் இன்னொரு அனல் மின் நிலையம் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய கோலத்தை போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


Next Story