பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை


பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை
x
தினத்தந்தி 15 Jan 2022 12:57 PM GMT (Updated: 15 Jan 2022 12:57 PM GMT)

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 

ஊரடங்கு

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. 

மேலும் கடந்த 14-ந் தேதி முதல் வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறமுள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

 இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 4.14 மணி முதல் 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணி வரை உள்ளது. 

கிரிவலம் செல்ல தடை

இந்த மாத பவுர்ணமி கிரிவலத்திற்கும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பவுர்ணமி சமயத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வர வேண்டாம்.

 பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவிட வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story