தேங்காய் பருப்பு விலை கடும் வீழ்ச்சி


தேங்காய் பருப்பு விலை கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 15 Jan 2022 3:07 PM GMT (Updated: 15 Jan 2022 3:07 PM GMT)

தேங்காய் பருப்பு விலை கடும் வீழ்ச்சி

காங்கேயம், 
தேங்காய் வரத்து அதிகரித்த காரணத்தினால் காங்கேயம் மார்க்கெட்டில் தேங்காய் பருப்பு விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. 15 கிலோ எடைகொண்ட தேங்காய் எண்ணெய் டின் ரூ.1,980-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேங்காய் பருப்பு 
காங்கேயம் பகுதிகளில்  600க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. இங்கு  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.  பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,  ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்களும், தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகின்றனர்.
இந்த களங்களுக்கு அந்தந்த பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரளாவிலிருந்தும் தேங்காய் கொண்டுவரப்பட்டு மட்டை உரித்து, உடைத்து உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. உலர்களங்களில் உலர்த்தப்படும் பருப்பு தனியார் தேங்காய் எண்ணெய் நிறுவனங்களுக்கும், காங்கேயம் பகுதியில் உள்ள கிரஷிங் யூனிட்டுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இது தவிர ராஜஸ்தான், கேரளா, மராட்டியம், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பிற மாநில பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
எண்ணெய்
காங்கேயம் கிரஷிங் யூனிட்டுகளில் எண்ணெயாக மாற்றப்படும் எண்ணெய், டேங்கர் லாரிகள், டின்களில் அடைக்கப்பட்டு வட மாநில பகுதிகளான டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்சுகளில் அடைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கடைகள் மூலம் விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது. தேங்காய் உலர்களம் மற்றும் அதனைச்சார்ந்த தொழில்களில் புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சை, மதுரை மற்றும் வட மாநிலங்களைச் சார்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் காங்கேயம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.123 முதல் ரூ.127 வரை விற்பனையானது. 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் ரூ.2 ஆயிரத்து 850 ஆக இருந்தது. அதன் பின்னர் தேங்காய் பருப்பு விலை படிப்படியாக குறையத்தொடங்கியது. ஜூன் மாதத்தில் 1 கிலோ பருப்பு ரூ.108 வரை விற்பனையானது. அப்போது 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் ரூ.2 ஆயிரத்து 530-க்கு விற்பனையானது. கடந்த நவம்பர் மாதம் 12 -ந்தேதி ரூ.101 ஆக இருந்த தேங்காய் பருப்பு விலை பின்னர் படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.84 ஆக உள்ளது. 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் ரூ.1,980 ஆக உள்ளது. இதனால் தோப்புகளில் தேங்காய்களின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தேக்கம்
இதுபற்றி தேங்காய் கள வட்டாரங்களில் கூறும்போது தற்போது தேங்காய் வரத்து அதிகரித்ததன் காரணமாக மார்க்கெட்டில் பருப்பின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் மட்டை உரிக்கப்பட்ட தேங்காய்கள் பண்டிகை நாட்களுக்காக வடமாநிலங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்படும். தற்போது கொரோனா தொற்று காரணமாக பண்டிகைகள் சிறப்பாக கொண்டாட முடியாத காரணத்தினால் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படும் மட்டை உரிக்கப்பட்ட தேங்காய்கள் தற்போது தேக்கம் அடைந்துள்ளது. இதுவும் தேங்காய் வரத்து அதிகரித்ததற்கு ஒரு காரணமாக உள்ளது.
மேலும் வரும் மாதங்களில் தேங்காய் சீசன் தொடங்க உள்ளதால் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து தேங்காய் வரத்து அதிகமாக இருக்கும். மேலும் தற்போது ராஜஸ்தான், கேரளா, டெல்லி ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை குறைவாக உள்ளதாலும், தற்போது பருப்பின் விலை குறைந்துள்ளது. அடுத்த 5 மாதங்களுக்கு விலை உயர வாய்ப்பில்லை. அதன் பின்னர் படிப்படியாக விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.

Next Story