முழு ஊரடங்கை ஒட்டி பாதுகாப்பு பணியில் 450 போலீசார்
நீலகிரியில் இன்று முழு ஊரடங்கை ஒட்டி பாதுகாப்பு பணியில் 450 போலீசார் ஈடுபட உள்ளனர்.
ஊட்டி
நீலகிரியில் இன்று முழு ஊரடங்கை ஒட்டி பாதுகாப்பு பணியில் 450 போலீசார் ஈடுபட உள்ளனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று (ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப் படுகிறது. இதையொட்டி அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன.
பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி தேவையில்லாமல் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள், கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
மக்கள் கூட்டம்
இந்த நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று ஊட்டி உழவர் சந்தை, நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர். இருப்பினும் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட இறைச்சி கடைகளில் தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கினர். உழவர் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்க இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
450 போலீசார் பாதுகாப்பு
நீலகிரியில் முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் 450 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 5 காவல் உட்கோட்டங்களில் போலீசார் தடுப்புகள் வைத்து வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.
விதிமுறைகளை மீறி வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும். அத்தியாவசிய தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களது நிறுவன அடையாள அட்டைகளை காண்பித்து செல்லலாம்.
மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story