tiruppur city no veicle movement on the road


tiruppur city no veicle movement on the road
x
தினத்தந்தி 15 Jan 2022 3:52 PM GMT (Updated: 15 Jan 2022 3:52 PM GMT)

திருப்பூர் மாநகரம் வெறிச்சோடியது

பொங்கல் பண்டிகை கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டதால் திருப்பூர் மாநகரம் வெறிச்சோடியது.
சொந்த ஊர் சென்றனர்
திருப்பூர் மாநகரை பொறுத்தவரை வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் தங்கியிருக்கிறார்கள். அதாவது மாநகர மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். பண்டிகை காலங்களில் இவர்கள் சொந்த ஊர் நோக்கி செல்வது வழக்கம். பொங்கல் பண்டிகை முக்கிய பண்டிகையாக இருப்பதால் சொந்த ஊரில் கொண்டாட திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றுவிடுவார்கள். ஒருவார காலத்துக்கு சொந்த ஊரில் இருந்து கொண்டாடி மகிழ்ந்து விட்டு அதன்பிறகே திருப்பூர் திரும்புவார்கள்.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு கடந்த 14-ந் தேதி முதல் 18 ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், இளம்பெண்களும் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதன்காரணமாக திருப்பூர் மாநகரம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. பொதுவாக பொங்கலுக்கு அடுத்த விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் வீட்டிலேயே தங்கினார்கள்.
வெறிச்சோடிய மாநகரம்
 திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப்பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்று விட்டதால் மாநகரில் பெரும்பாலான டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் மூடப்பட்டன. அதுபோல் வணிக நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. வாகன நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டன.
சனிக்கிழமை நாட்களில் பிரதான ரோடுகளில் வாகன நெரிசல் மிகுந்து காணப்படும். ஆனால் நேற்று மாநகரில் வாகன நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டன. காதர்பேட்டையில் உள்ள பனியன் கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. பரபரப்பு மிக்க திருப்பூர் மாநகரம் நேற்று வெறிச்சோடிய நிலையில் இருந்தன. இருசக்கர வாகனங்களை வாகன நிறுத்தங்களில் நிறுத்தி விட்டு தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டதால் மாநகரில் உள்ள பெரும்பாலான இருசக்கர வாகன நிறுத்தங்கள் வாகனங்களால் நிரம்பி வழிந்தன.

Next Story