தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 Jan 2022 4:20 PM GMT (Updated: 15 Jan 2022 4:20 PM GMT)

காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

குடிநீர் வசதி வேண்டும்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில்  68.மேலமருதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் வசதிக்காக கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கிராமமக்கள், 68.மேலமருதூர்.
குண்டும், குழியுமான சாலை 
காரைக்காலில் இருந்து நாகைக்கு செல்லும் இ.சி.ஆர். சாலையில் மாதாகோவில் வீதி, உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதியின் வழியாக தினமும் ஏராளமானோர் தங்களது வாகனங்களில் பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த இந்த சாலை தற்போது  குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், காரைக்கால்.
நாய்கள் தொல்லை 
நாகை மாவட்டம் கீழ்வேளூர் கச்சனம் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள்  சாலையின் குறுக்கே செல்வதால் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மேலும்  சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி, துரத்தி கடிப்பதோடு,  இருசக்கர வாகனங்களில் வருபவர்களையும் விரட்டி செல்கின்றன. அதுமட்டுமின்றி வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, ஆடுகளை கடித்துவிடுகிறது. எனவே  பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-பொதுமக்கள், கீழ்வேளூர்.

Next Story