பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 3 வாலிபர்கள் சிக்கினர்


பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 3 வாலிபர்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 15 Jan 2022 4:23 PM GMT (Updated: 15 Jan 2022 4:23 PM GMT)

தூத்துக்குடியில் வீடு முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி தங்க சங்கிலியை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வீடு முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி தங்க சங்கிலியை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கத்தியை காட்டி...
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜா என்ற நாகூர் அனிபா. இவரது மனைவி லைலா என்ற பாத்திமா (வயது 47). இவர் நேற்று தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்  வந்த 3 மர்ம நபர்கள் அவரது அருகில் வந்து நின்றனர். அவரிடம் ஒரு முகவரியை கேட்பது போல பேச்சு கொடுத்தனர்.
அப்போது அதில் ஒரு வாலிபர் கத்தியை எடுத்து திடீரென்று பாத்திமா கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்த நிலையில்,  கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் சங்கிலியை மற்றொருவர் பறிக்க முயன்றுள்ளார். 
சங்கிலி பறிப்பு
சற்று சுதாரித்து கொண்ட அவர்,  பாத்திமா கத்தியைத் தட்டி விட முயன்ற போது, 2 வாலிபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர். கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசாரிடம் பாத்திமா புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை நடத்தினார். 
3 பேர் கைது
இதில், தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி (20), பாத்திமா நகரை சேர்ந்த கார்லீன் (21), ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த முருகன் (22) ஆகிய 3 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்து,  3 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர். மேலும் அவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story