தியாகதுருகம் அருகே விபத்து கார் கவிழ்ந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் பலி


தியாகதுருகம் அருகே விபத்து கார் கவிழ்ந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 Jan 2022 5:20 PM GMT (Updated: 15 Jan 2022 5:20 PM GMT)

தியாகதுருகம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் டாக்டர் உள்பட 2 பேர் பலியானார்கள்


கண்டாச்சிமங்கலம்

உறவினர் வீட்டுக்கு...

திருப்பூர் குமார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் மனைவி கற்பகம் (வயது 48) பல் மருத்துவர். இவரது மகள் கவின்மலர்(வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் 4-ம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கற்பகம், இவரது தாய் டாக்டர் உமாராணி(81), மகள் கவின்மலர் ஆகியோருடன் காரில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை கற்பகம் ஓட்டினார். 

2 பேர் பலி

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பெரியமாம்பட்டு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த சக்கரை (65) என்பவர் மீது மோதி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது. விபத்தில் படுகாயம் அடைந்த சக்கரை, கற்பகம் உள்ளிட்ட 4 பேரையும், தியாகதுருகம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சக்கரை மற்றும் உமாராணி ஆகியோர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர்.

காவலாளி

 கற்பகம், கவின்மலர் ஆகியோரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பலியான சக்கரை தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். விபத்து குறித்து சக்கரை மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story