சத்தி, கேர்மாளம் பகுதியில் யானை தாக்கி 2 விவசாயிகள் பலி


சத்தி, கேர்மாளம் பகுதியில் யானை தாக்கி 2 விவசாயிகள் பலி
x
தினத்தந்தி 15 Jan 2022 10:27 PM GMT (Updated: 15 Jan 2022 10:27 PM GMT)

சத்தி, கேர்மாளம் பகுதியில் யானை தாக்கி 2 விவசாயிகள் இறந்தனர்.

ஈரோடு
சத்தி, கேர்மாளம் பகுதியில் யானை தாக்கி 2 விவசாயிகள் இறந்தனர்.
காவல் பணி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் தோட்டத்தில் காவல் காத்து வருகின்றனர்.
கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட ஜே.ஆர்.எஸ்.புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மசனையன் (வயது 60). விவசாயி. இவருடைய தோட்டம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இங்கு அவர் 3 ஏக்கரில் மக்காசோள பயிர் சாகுபடி செய்து இருந்தார். அதை அறுவடை செய்து கட்டுகளாக கட்டி தோட்டத்தில் வைத்திருந்தார். இதனால் யானையிடம் இருந்து பயிரை பாதுகாக்க மசனையன் தோட்டத்துக்குள்ளேயே குடிசை அமைத்து நேற்று முன்தினம் இரவு காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
யானை தாக்கி சாவு
அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு மசனையன் குடிசையில் இருந்து எழுந்து சென்று பார்த்துள்ளார். அப்ேபாது அங்கு நின்றிருந்த யானை அவரை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் அவர் உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த நிலையில் தோட்டத்துக்கு சென்ற மசனையன் வீடு திரும்பாததால் உறவினர்கள் நேற்று காலை அங்கு சென்று பார்த்துள்ளனர். அவர் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி கேர்மாளம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று மசனையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த மசனையனுக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
மற்றொருவரும் பலி
இதேபோல் சத்தியமங்கலம் பகுதியில் யானை தாக்கி விவசாயி ஒருவர் இறந்தார். அதன் விவரம் வருமாறு:-
சத்தியமங்கலம் வனச்சரகத்தில் உள்ள பண்ணாரி பிரிவு பீக்கிரி பாளையத்தை சேர்ந்தவர் குருநாதன் (72). ஊரையொட்டி உள்ள விவசாய நிலத்தில் இவர் சோளம் பயிர் செய்துள்ளார்.  தற்போது இந்த சோளப்பயிர் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. யானையிடம் இருந்து பயிரை காக்க குருநாதன் இரவு காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வனப்பகுதியில் இருந்து அங்கு ஒரு யானை வந்தது. சத்தம் கேட்டு குருநாதன் சென்று டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த யானை குருசாமியை தனது துதிக்கையால் தூக்கி வீசிவிட்டு் அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த குருநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நிவாரணம்
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று குருநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வனச்சரகர் பெர்னாட் பாதிக்கப்பட்ட குருநாதன் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

Next Story