கள்ளக்காதலை கைவிட மறுத்த டிரைவர் படுகொலை


கள்ளக்காதலை கைவிட மறுத்த டிரைவர் படுகொலை
x
தினத்தந்தி 16 Jan 2022 9:03 PM GMT (Updated: 16 Jan 2022 9:03 PM GMT)

ராமநகர் அருகே, கள்ளக்காதலை கைவிட மறுத்த டிரைவரை அரிவாளால் வெட்டி கொன்ற பெண்ணின் கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

ராமநகர்: ராமநகர் அருகே, கள்ளக்காதலை கைவிட மறுத்த டிரைவரை அரிவாளால் வெட்டி கொன்ற பெண்ணின் கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

கள்ளக்காதல்

ராமநகர் மாவட்டம் கனகபுரா புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் ஜெகதீஷ்(வயது 28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. டிரைவரான ஜெகதீஷ் பெங்களூருவில் கார் ஓட்டி வந்தார். இந்த நிலையில் ஜெகதீசுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமு என்பவரின் மனைவிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதுபற்றி அறிந்ததும் ராமு, கள்ளக்காதலை கைவிடும்படி ஜெகதீசிடம் கூறியுள்ளார். ஆனாலும் கள்ளக்காதலை கைவிட ராமு மறுத்து விட்டார். இந்த நிலையில் சங்கராந்தி பண்டிகைக்காக பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு ஜெகதீஷ் வந்து இருந்தார். அப்போது ராமுவின் மனைவியுடன் ஜெகதீஷ் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

வெட்டி கொலை

இதுபற்றி அறிந்த ராமு, ஜெகதீசை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் முன்பு ஜெகதீஷ் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த ராமு அரிவாளால் ஜெகதீசை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர் கனகபுரா புறநகர் போலீஸ் நிலையத்தில் ராமு சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஜெகதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கைதான ராமு மீது கனகபுரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story