2 மகள்களை கொன்று பத்ரா கால்வாயில் குதித்து பெண் தற்கொலை


2 மகள்களை கொன்று பத்ரா கால்வாயில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 16 Jan 2022 9:23 PM GMT (Updated: 16 Jan 2022 9:23 PM GMT)

கடன் வாங்கியவர் அவதூறு பரப்பியதால் 2 மகள்களை கொன்று பத்ரா கால்வாயில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவமொக்கா: கடன் வாங்கியவர் அவதூறு பரப்பியதால் 2 மகள்களை கொன்று பத்ரா கால்வாயில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.8 லட்சம் கடன்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா யடேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி வீணா (32). இந்த தம்பதியின் மகள்கள் ஞானவி (7), தேவிகா (1). ஹரதொளலு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி ஆஷா. ஆட்டோ டிரைவரான சந்தோஷ், தனது ஆட்டோவில் ஞானவியை தினமும் பள்ளியில் கொண்டு விட்டு, மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். 

இதனால் ஆட்டோ டிரைவர் சந்தோஷ், வீணா மற்றும் அவரது கணவர், குழந்தைகளுடன் நன்கு பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவர் சந்தோசும், அவரது மனைவி ஆஷாவும் வீணாவிடம் இருந்து ரூ.8 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். 

கள்ளத்தொடர்பு இருப்பதாக...

ஆனால் கடன் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் வீணா, கடனை திரும்ப கேட்டு வந்துள்ளார். ஆனாலும் சந்தோசும், ஆஷாவும் பணத்தை கொடுக்காமல் வீணாவுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும், வீணா தொடர்ந்து பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்ததால் சந்தோசும், ஆஷாவும் ஆத்திரமடைந்துள்ளனர். 

இந்த நிலையில், வீணாவுக்கும் வேறொரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவன்-மனைவி இருவரும் அவதூறு பரப்பி உள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த வீணா, மனமுடைந்து காணப்பட்டார். 

3 பேர் சாவு

இந்த நிலையில், வாங்கிய கடனை திரும்ப கேட்டதால் தன்னை பற்றி அவதூறு பரப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளான வீணா, குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கராந்தி பண்டிகைக்கு தாய் வீட்டுக்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு வீணா தனது மகள்கள் 2 பேரையும் அழைத்து கொண்டு சென்றார். 

பத்ராவதி அருகே அஞ்சினசித்தாப்புரா பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கிய வீணா, அங்கிருந்து பத்ரா கால்வாய் இருக்கும் பகுதிக்கு சென்றார். அங்கு தனது மனதை கல்லாக்கி கொண்டு மகள்கள் ஞானவி, தேவிகாவை கால்வாயில் வீசிவிட்டு தானும் கால்வாயில் குதித்தார். இதில் அவர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

2 பேரின் உடல்கள் மீட்பு

இதுபற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த வீணாவின் கணவர் சந்தோஷ்குமார், ஒலேஒன்னூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் உதவியுடன் பத்ரா கால்வாயில் 3 பேரின் உடல்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா யக்கனஹள்ளி பகுதியில் ஓடும் கால்வாயில் வீணாவின் உடலும், சன்னகிரி தாலுகா நல்லூர் பகுதியில் ஓடும் கால்வாயில் ஞானவியின் உடலும் கைப்பற்றப்பட்டது. 

ஆனால் தேவிகாவின் உடல் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் தீயணைப்பு படையினர் தேவிகாவின் உடலை தொடர்ந்து தேடி வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட வீணா, ஞானவியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு சந்தோஷ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மனைவி மற்றும் மகளின் உடல்களை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. 

தம்பதி கைது

முன்னதாக வீணா தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதில், தங்களின் சாவுக்கு ஆட்டோ டிரைவர் சந்தோசும், அவரது மனைவி ஆஷாவும் தான் காரணம் என்று எழுதியிருந்தார். இதுகுறித்து வீணாவின் கணவர் சந்தோஷ்குமார், ஒலேஒன்னூர் போலீசில் சந்தோஷ் மற்றும் ஆஷா மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் மற்றும் அவரது மனைவி ஆஷா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

Next Story