விழுப்புரத்தில் கார் மீது தனியார் பஸ் பயங்கர மோதல் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்


விழுப்புரத்தில் கார் மீது தனியார் பஸ் பயங்கர மோதல் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Jan 2022 5:49 PM GMT (Updated: 17 Jan 2022 5:49 PM GMT)

விழுப்புரத்தில் கார் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்

விழுப்புரம்

தனியார் பஸ்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக தஞ்சாவூருக்கு நேற்று இரவு கார் ஒன்று புறப்பட்டது. இந்த கார் இரவு 7.30 மணியளவில் விழுப்புரம் திருநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. காருக்கு பின்னால் ஜீப் ஒன்றும் சென்றது.
அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பஸ் ஜீப்பை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. 
மோதிய வேகத்தில் கார், பஸ்சின் அடியில் சிக்கி  அப்பளம்போல நொறுங்கியது. விபத்து நடந்ததும் தனியார் பஸ் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

அபயகுரல் எழுப்பினர்

இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதில் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். உடனே அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய தஞ்சாவூர் விக்டோரியா நகரை சேர்ந்த மார்ட்டின் மகன் ஆனந்த்ஜோகன்(வயது 23), அவரது சகோதரி கேத்தரின் பிலோரியா(21) ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

1 மணி நேர போராட்டம்

ஆனால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய கார் டிரைவரான அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(43) என்பவரை மட்டும் எளிதில் மீட்க முடியவில்லை. வலியால் அவர் அலறி துடித்தார். 
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புவீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். 
விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story