வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது


வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2022 7:29 PM GMT (Updated: 17 Jan 2022 7:29 PM GMT)

திருவேங்கடம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவேங்கடம்:
திருவேங்கடம் தாலுகா சங்குபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 30). இவர் விருதுநகர் மாவட்டம் கீழசத்திரம் பகுதியைச் சேர்ந்த சங்கிலியாண்டி (49) என்பவரது பொக்லைன் எந்திரத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். ராமச்சந்திரன் இதற்கு முன்னதாக குலசேகரன்கோட்டையை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது பொக்லைன் எந்திரத்தில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தாராம்.
ராமச்சந்திரன் சங்கிலியாண்டியிடம் வேலைக்கு சேர்ந்தது முதல் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் தொழிலில் வேலுச்சாமி தரப்புக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டதாம். இதனால் ராமச்சந்திரன் மீது பகை கொண்டிருந்த வேலுச்சாமியின் சகோதரர் திருப்பதி, அவரது தந்தை கந்தசாமி (65), உறவினர் நிறை பாண்டி (38), நடராஜன் (23) ஆகியோர் சங்கரன்கோவில் சாலையில் டாஸ்மாக் கடை அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ராமச்சந்திரன், சங்கிலியாண்டி, அவரது மகன் மணிகண்டன் ஆகியோரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கையில் இருந்த அரிவாளால் அவர்களை வெட்ட முயன்றனர். இதில் ராமச்சந்திரனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகவடிவு வழக்குப்பதிவு செய்து நிறை பாண்டியை கைது செய்தார்.

Next Story