10 வயது சிறுமி சைக்கிள் பயணம்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 10 வயது சிறுமி சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
விருதுநகர்,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசிஷ் நாம்தேவ் பாட்டீல். அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்து வரும் இவரது 10 வயது மகள் சாயி ஆசிஷ்பாட்டீல். தேசிய அளவில் நீச்சல் மற்றும் சைக்கிள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இச்சிறுமி தனது தந்தையுடன் 4 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும். பெட்ரோலை சேமிக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை மக்களிடையே வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள இச்சிறுமி காஷ்மீரில் 36 நாட்களுக்கு முன்பு தனது சைக்கிள் பயணத்தை தொடங்கி கன்னியாகுமரியில் நாளை மறுநாள் பயணத்தை முடிக்கிறார். விருதுநகர் வருகை தந்த சிறுமி சாயி ஆசிஷ் பாட்டீலுக்கு விருதுநகர் அரிமா சங்கம், வியாபாரிகள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லம் சென்ற சிறுமி அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story