காதல் விவகாரத்தில் என்ஜினீயர் கொலையா?


காதல் விவகாரத்தில் என்ஜினீயர் கொலையா?
x
தினத்தந்தி 18 Jan 2022 9:08 PM GMT (Updated: 18 Jan 2022 9:08 PM GMT)

காதல் விவகாரத்தில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்:

காதல் விவகாரத்தில் முன்விரோதம்
ஜெயங்கொண்டம் அருகே உள்ள முன்னூரான்காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த பட்டுசாமி- கம்சலை தம்பதியின் மகன் அழகேசன்(வயது 19). சிவில் என்ஜினீயரிங் பட்டய படிப்பு முடித்துள்ளார். தாய்-தந்தை இறந்துவிட்ட நிலையில் அழகேசன் தனது பெரியம்மாள் கவுசல்யா குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக சிலருடன் முன்விரோதம் இருந்ததாகவும், அந்த பெண்ணை மற்றொரு வாலிபரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னூரான்காடுவெட்டியில் உள்ள ஆசனேரியில் ரத்த காயத்துடன் அழகேசன் பிணமாக மிதந்தார். இதையடுத்து அவரது உடலை ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அழகேசன் கொலை செய்யப்பட்டதாக கூறி ஒரு வாலிபரை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.
கொலையா?
இந்நிலையில் அழகேசன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று அவரது பெரியம்மாள் கவுசல்யாவிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மற்றும் முன்னூரான்காடுவெட்டி பகுதி மற்றும் கல்லாத்தூர் வடவீக்கம் பகுதிகளில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் மற்றும் துணை சூப்பிரண்டு(பயிற்சி) சங்கர் கணேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றபோது, குற்றவாளியை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கிச்செல்வோம் என்று அழகேசனின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள், அழகேசனின் உடலை அடக்கம் செய்ய சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது. மேலும் காதல் விவகாரத்தில் அழகேசன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story