வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Jan 2022 4:28 PM GMT (Updated: 19 Jan 2022 4:28 PM GMT)

கண்டமங்கலம், வானூர் ஒன்றியங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆழியூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி கட்டிட திட்டத்தின் கீழ் ரூ.15.45 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தினார். தொடர்ந்து, அப்பள்ளியில் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி பணியை பார்வையிட்டதோடு தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

வீடு கட்டும் திட்டப்பணிகள்

அதன்பிறகு அதே பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்ட பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் உண்மை நிலை, தகுதியுள்ள பயனாளிகளா என்பது குறித்து வீடு, வீடாக சென்று கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டு வீடு கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதோடு கூரை, ஓடு, சிமெண்டு அட்டை மற்றும் வாடகை குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் தகுதியான நபர்களை கண்டறிந்து வீடுகள் வழங்குமாறு ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
மேலும் அதே ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மரக்கன்று வளர்க்கும் பணிகளுக்காக அகழி வெட்டும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலக புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டு திட்ட மதிப்பீட்டை உடனடியாக தயார் செய்து, பணிகளை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வானூர் ஒன்றியம்

அதன் பின்னர் வானூர் ஒன்றியத்திற்குட்பட்ட பூத்துறை கிராம ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் அமிழ்வு குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் மோகன் பார்வையிட்டார். தொடர்ந்து, அதே ஊராட்சியில் மாதிரி நூலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட அவர், இந்நூலகத்தில் வாசகர்கள் படிப்பதற்கு ஏதுவாக இருக்கை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கழிவறை வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்திடவும், பணியை விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story