மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பலி


மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 19 Jan 2022 7:34 PM GMT (Updated: 19 Jan 2022 7:34 PM GMT)

வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பலியானார். 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

வாடிப்பட்டி, 
வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பலியானார். 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 
போலீஸ்காரர் சாவு 
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி கள்ளர் தெருவை சேர்ந்தவர் செல்லமணி. இவரது மகன் மகேந்திரன் (வயது 30). இவர் அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி செய்து வந்தார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ஜீவிதன் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு இவரது வீட்டில் வயரிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மகேந்திரன் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். 
அரசு மரியாதையுடன் தகனம் 
இதுகுறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் அங்கு சென்று மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த போலீஸ்காரர் மகேந்திரன் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். 
மேலும் கச்சைகட்டி மயானத்தில் நடந்த இறுதி சடங்கில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் கனகசபாபதி மற்றும் ஏராளமான போலீசார் கலந்துகொண்டனர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மகேந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story